திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா நேற்றிரவு தொடங்கியது. இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய துர்கை அம்மன். 
தமிழகம்

காவல் தெய்வம் துர்கை அம்மன் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா திருவண்ணாமலையில் தொடக்கம்: வரும் 19-ம் தேதி மகா தீபம்

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் காவல் தெய்வமான துர்கை அம்மன் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நேற்றிரவு தொடங்கியது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நேற்று தொடங்கி வரும் 23-ம் தேதி வரை என 17 நாட்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி, காவல் தெய்வமான துர்கை அம்மன் உற்சவம் நேற்றிரவு நடைபெற்றது. காமதேனு வாகனத்தில் எழுந்தருளி, சிறப்பு அலங்காரத்தில் துர்கை அம்மன் அருள்பாலித்தார். இதையடுத்து இன்று (8-ம் தேதி) சிம்ம வாகனத்தில் பிடாரி அம்மன் உற்சவமும், நாளை (9-ம் தேதி) வெள்ளி மூஷீக வாகனத்தில் விநாயகர் உற்சவமும் மற்றும் ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடைபெற உள்ளது.

10-ம் தேதி கொடியேற்றம்

இதைத்தொடர்ந்து, அண்ணாமலையார் கோயிலில் மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்கக்கொடி மரத்தில் வரும் 10-ம் தேதி காலை 6.30 மணி முதல் 7.25 மணிக்குள் விருச்சிக லக்கினத்தில் கொடியேற்றம் நடைபெற உள்ளது. அதன்பிறகு, 10 நாட்கள் சுவாமிகளின் உற்சவம் நடைபெறும். கரோனா தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக, அண்ணாமலையார் கோயிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் சுவாமிகளின் வீதியுலா நடைபெறும். மாட வீதியில் நடைபெறும் உற்சவம் மற்றும் மகா தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 19-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு மூலவர் சன்னதியில் பரணி தீபமும் மற்றும் மாலை 6 மணியளவில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. மகா தீபம் ஏற்றப்படும் சில நிமிடங்களுக்கு முன்பாக, மகாதீப தரிசன மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி, ஆண் – பெண் சமம் என்ற தத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் அர்த்தநாரீஸ்வரர் காட்சிக் கொடுக்க உள்ளார். இந்நிகழ்வு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும். அர்த்தநாரீஸ்வரர் காட்சி தருவதை பக்தர்கள் தரிசிக்க, தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டதும், ஜோதி வடிவமாக அண்ணாமலையாரே காட்சி கொடுப்பதால் மூலவர் சன்னதி அடைக்கப்படும். பின்னர் மறுநாள், மூலவர் சன்னதி திறக்கப்பட்டு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை ஆகியவை வழக்கம்போல் நடைபெறும்.

இதையடுத்து, கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளால் அய்யங்குளத்தில் 3 நாட்கள் நடைபெறும் தெப்பல் உற்சவமானது இந்தாண்டும் அண்ணாமலையார் கோயிலில் உள்ள பிரம்மத் தீர்த்த குளத்தில் 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தெப்பல் உற்சவத்தை தொடர்ந்து, வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் உற்சவம் வரும் 23-ம் தேதி நடந்ததும் விழா நிறைவடையும்.

SCROLL FOR NEXT