தமிழகம்

டெல்லியில் பத்மஸ்ரீ விருது: நவ.8-ம் தேதி பெறுகிறார் புதுச்சேரி டெரகோட்டா கலைஞர் முனுசாமி

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி டெரகோட்டா கலைஞர் முனுசாமி, டெல்லியில் பத்மஸ்ரீ விருதை வரும் 8-ம் தேதி பெறுகிறார்.

மத்திய அரசு பல்வேறு துறைகளைச் சார்ந்த சிறப்பான பணிகளில் ஈடுபட்டு வருபவர்களுக்கு 2020ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுகளைக் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது. இதில் கலைப் பிரிவில் புதுச்சேரி வில்லியனூரை அடுத்த கணுவாப்பேட்டையில் வசிக்கும் வி.கே.முனுசாமிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இவ்விருது வழங்கும் நிகழ்வு வரும் 8-ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடக்கிறது.

குடியரசுத் தலைவர் கையால் இவ்விருதைப் பெறவுள்ள டெரகோட்டா கலைஞர் முனுசாமி கூறுகையில், ''அழிவின் விளிம்பில் இருக்கும் இந்த சுடுகளிமண் கலையை இன்றைய தலைமுறையினரும் தெரிந்துகொள்ளும் வகையில் மாவட்டத் தொழில் மையத்துடன் இணைந்து வேலையில்லாப் பட்டதாரிகள் மற்றும் மாணவர்களுக்குக் கற்றுத் தருகிறேன்.

இதன் மூலம் இந்தக் கலை பாதுகாக்கப்படும். இந்தப் பணிக்காக மாநில அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை அறிவித்தது. தற்போது குடியரசுத் தலைவர் கையால் விருது பெறுவது என்போன்ற கலைஞர்களுக்கு ஊக்கத்தையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது. தேசிய விருதுகள், யுனெஸ்கோ விருதுகள் கிடைத்திருந்தாலும் பத்மஸ்ரீ விருது கிடைத்திருப்பது பாரம்பரியக் கலைகளைப் பாதுகாக்க உதவும். விருது பெற வரும் 6-ம் தேதி டெல்லி புறப்படுகிறேன்'' என்று மகிழ்வுடன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT