தமிழகம்

சென்னை திருமங்கலத்தில் தொழிலதிபரை கடத்திய வழக்கில் உதவி ஆணையர், ஆய்வாளர் உட்பட 6 போலீஸார் பணியிடை நீக்கம்

செய்திப்பிரிவு

சென்னை திருமங்கலத்தில் தொழிலதிபரை கடத்தி, சொத்துகளை எழுதி வாங்கிய வழக்கில் சிக்கிய காவல்துறை அதிகாரிகள் 6 பேரை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ். இவரை பண்ணை வீட்டில் கட்டிப்போட்டு அவருடைய சொத்துகளை திருமங்கலம் காவல் நிலைய அதிகாரிகள் எதிர் தரப்பினருக்காக எழுதி வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சென்னை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டார்.

இது தொடர்பான விசாரணை கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வந்தது. இதன் தொடர்ச்சியாக தொழிலதிபர் ராஜேஷை கடத்தி, சொத்தை எழுதி வாங்கிய புகாரில் சிக்கிய சென்னை திருமங்கலம் காவல் உதவி ஆணையர் சிவகுமார், காவல் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உட்பட திருமங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்கள் 10 பேர் மீது சிபிசிஐடி போலீஸார் அண்மையில் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், குற்றச்சாட்டுக்கு உள்ளான அனைத்து போலீஸாரும் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இந்நிலையில் காவல் உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் சரவணன், காவல் உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உட்பட 6 போலீஸாரை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT