வல்லநாடு ஆற்றுப் பாலத்தில் மீண்டும் சேதம் ஏற்பட்டதால், அந்த பகுதியை சாலை தடுப்புகள் வைத்து மூடி, சீரமைப்பு பணி மேற்கொண்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள். 
தமிழகம்

ஒரு பக்கம் சீரமைத்தால் மறுபக்கம் சேதமடைகிறது; வலுவில்லாத வல்லநாடு பாலத்தில் பயணிக்க அச்சம்: ‘பஞ்சர்’ பார்க்க மட்டும் பலகோடி ரூபாய் செலவு

செய்திப்பிரிவு

கன்னியாகுமரி- காஷ்மீர் இடையேயான தேசிய நெடுஞ்சாலையுடன் தூத்துக்குடி துறைமுகத்தை இணைக்கும் வகையில், திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி வரை 47.250 கி.மீ. தொலைவுக்கு ரூ.349.50 கோடியில் நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டது.

கடந்த 2010-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு, 2013-ம் ஆண்டு முடிவடைந்து, வாகன போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. இந்த நான்குவழிச் சாலையில் வல்லநாடு பகுதியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பெரிய நான்குவழிப் பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலத்தை கடந்து தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

ஆனால், இந்த பாலம் அடிக்கடி சேதமடைந்து வருகிறது. பாலம் கட்டப்பட்டு நான்கு ஆண்டுகளில் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாலத்தின் ஒரு பகுதியில் (திருநெல்வேலி- தூத்துக்குடி வழித்தடம்) நடுவே பெரிய துளை விழுந்தது. இதனால் சுமார் 6 மாத காலம் இந்த பாதையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் ரூ.3.14 கோடி ஒதுக்கப்பட்டு பாலம் சீரமைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாலத்தின் மற்றொரு பகுதியில் (தூத்துக்குடி- திருநெல்வேலி வழித்தடம்) 2 பெரிய துளைகள் விழுந்து சேதம் ஏற்பட்டது. பாலம் சேதமடைந்து ஒன்றரை ஆண்டுக்கு மேலாகியும், இன்னும் சீரமைக்கப்படாததால் வாகனங்கள் அனைத்தும் தற்போது வரை ஒருவழிப் பாதையில் சென்று வருகின்றன. இந்நிலையில் வாகனங்கள் சென்றுவரும் இந்த ஒருவழிப் பாதை பகுதியில் நேற்று மேலும் ஒரு துளை விழுந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வந்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வாகன ஓட்டுநர்கள் சிரமமடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்ட இயக்குநர் சங்கர் கூறும்போது, “வல்லநாடு ஆற்றுப் பாலத்தைமுழுமையாக சீரமைக்க ரூ.20 கோடியில் திட்ட மதிப்பீடு அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் 15 நாட்களில் அதற்கு ஒப்புதல்கிடைத்து பணிகள் தொடங்கப்படவுள்ளன. தற்போது பாலத்தில் லேசான கீறல்ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு சிறு சிறு பாதிப்புகள் ஏற்படுவது சகஜம் தான். இந்த சேதம் ஒரு வாரத்தில் சீரமைக்கப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT