கல்லணை அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்டப் பாலத்தில் கனரக வாகனங்களை அனுமதிக்கக் கோரிய வழக்கில் திருச்சி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூரைச் சேர்ந்த ஜீவா குமார், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
''கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கல்லணை அருகே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலம் திருச்சி மற்றும் கும்பகோணத்தை இணைக்கும் பாலமாக உள்ளது. இந்த வழித் தடத்தில் திருவையாறு, சுவாமிமலை, பாபநாசம் போன்ற நகரங்கள் உள்ளன. இந்தப் பாலம் செயல்பாட்டுக்கு வந்தாலும் சிறு வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.
திருச்சியிலிருந்து இப்பாலத்தில் சென்றால் கும்பகோணத்திற்கு 76 கி.மீ. தூரத்திலும், தஞ்சாவூர் வழியாக சுவாமி மலைக்கு 93 கி.மீ. தூரத்திலும் செல்ல முடியும். கனரக வாகனங்களை அனுமதித்தால் நெல் மற்றும் விவசாயப் பயிர்களை வேகமாக பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டுசெல்ல முடியும்.
எனவே, கல்லணை அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தில் கனரக வாகனங்கள் மற்றும் நகரப் பேருந்துகள் செல்வதற்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்''.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியம் வாதிட்டார்.
பின்னர், மனு தொடர்பாக தமிழக தேசிய நெடுஞ்சாலைச் செயலர், திருச்சி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிச. 5-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.