தமிழகம்

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; தமிழகத்தில் 6 கோடியே 28 லட்சத்து 94 ஆயிரத்து 531 வாக்காளர்கள்: பெயர் சேர்த்தல், நீக்கல் பணிகள் நவ.30 வரை நடைபெறும்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி 6 கோடியே 28 லட்சத்து 94 ஆயிரத்து 531 வாக்காளர்கள் உள்ளனர்.

2022 ஜன.1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயதுநிறைவடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் மற்றும் இறந்தவர்கள் பெயர்களை நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், திருத்தம் செய்வதற்கான சிறப்பு திருத்தப் பணிகள் நவ.1 முதல் 30.ம் தேதி வரை நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ நேற்று வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 28 லட்சத்து 94 ஆயிரத்து 531 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 3 கோடியே9 லட்சத்து 17,667 ஆண் வாக்காளர்கள், 3 கோடியே 19 லட்சத்து 69,522 பெண் வாக்காளர்கள், 7,342 மூன்றாம் பாலினத்தவர் உள்ளனர்.

அதிக வாக்காளர்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் தொகுதி 7 லட்சத்து 48 வாக்காளர்களுடன் அதிக வாக்காளர் கொண்ட தொகுதியாகவும், சென்னை துறைமுகம்தொகுதி 1,76,679 வாக்காளர்களுடன் குறைந்த வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாகவும் உள்ளது.

தமிழகத்தில் நேற்று தொடங்கிய வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் நவ.30-ம் தேதிவரை நடைபெறும். இதை முன்னிட்டு, சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், தொகுதிக்குள் முகவரி மாற்றம்ஆகியவற்றுக்கான உரிய படிவங்களில் பூர்த்தி செய்து, ஆன்லைன் வாயிலாகவும், நேரடியாக தாலுகாஅலுவலகங்களிலும் வழங்கலாம்.

சிறப்பு முகாம்கள்

இதுதவிர, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நவ.13, 14 மற்றும் 27, 28 என 4 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இங்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் படிவங்களை வழங்கலாம். இதுதவிர, அனைத்து அலுவலக நாட்களிலும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர் பதிவு உதவி அலுவலர்களிடமும் வழங்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க www.nvsp.in மற்றும் https://voterportal.eci.gov.in மற்றும் VOTER HELP LINE கைபேசி செயலியிலும் பதிவு செய்யலாம். வெளிநாட்டில் வசிப்பவர்கள் 6ஏ என்ற படிவத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT