பொது நிதி மேலாண்மை சிறப்புக் குழுவின் செயல்பாடு குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில், நிதி, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று விளக்கம் அளித்தார். உடன் நிதித்துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்டோர். படம்: க.பரத் 
தமிழகம்

வரும் ஆண்டில் நிதி பற்றாக்குறை குறைக்கப்படும்; நிதித் துறை கண்காணிப்பு இல்லாமல்ஒரு ரூபாய் பரிமாற்றம்கூட செல்லாது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உறுதி

செய்திப்பிரிவு

தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறை வரும் ஆண்டில் குறைக்கப்படும். அரசு துறைகளில் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியில் ஒரு ரூபாய்கூட நிதித் துறையின் கண்காணிப்பு இல்லாமல் செல்லக் கூடாது என்பதற்கான புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

தமிழகத்தின் பொது நிதிமேலாண்மை குறித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

பல துறைகளில் செலவு செய்யப்பட்டதாக கணக்கு காட்டப்பட்ட தொகை, வேறு பணிக்காக மாற்றப்பட்டு நிதித் துறை கண்காணிப்பில் இல்லாமல் பல்வேறு இடங்களில் இருப்பதாக தணிக்கை அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதை கண்டறிய நிதித் துறை மூத்த அதிகாரியின் கீழ் சிறப்பு பணிக் குழு உருவாக்கப்பட்டது. இக்குழுவின் ஆய்வில் அரசின் கணக்குக்கும், வங்கிகளின் கணக்குக்கும் நிறைய குளறுபடிகள் உள்ளது தெரியவந்துள்ளது.

துறைகளில் செலவு செய்யப்படும் ஒரு ரூபாய்கூட நிதித் துறையின் கண்காணிப்பு இல்லாமல் செல்லக் கூடாது என்ற அளவுக்கு புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்திப்பின்போது நிதித் துறை செயலர் ச.கிருஷ்ணன், சிறப்பு செயலர் ரீட்டா ஹரிஷ் தாக்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT