தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் வரும் 04.11.2021 அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அரசு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த ஆண்டு வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை வருகிறது. வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை அளித்தால் ஊருக்குச் சென்று வருபவர்களுக்கு வசதியாக இருக்கும் என்று அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், தீபாவளிக்கு மறுநாள் (05/11/2021) அரசு விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''4/11/2021 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பணியாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று விழாவை மகிழ்வுடன் கொண்டாட ஏதுவாக, 05/11/2021 வெள்ளிக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு பல தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் அரசுக்கு வரப்பெற்றன.
அக்கோரிக்கைகளை அரசு கவனமுடன் பரிசீலித்து, தீபாவளிக்கு அடுத்த நாளான 05/11/2021 வெள்ளிக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்தும், அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 20/11/2021 அன்று பணி நாளாக அறிவித்தும் ஆணை வெளியிடப்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.