தமிழகம்

சரவெடி, ரசாயனம் கலந்த பட்டாசுகளை வெடித்தால் குற்றவியல் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை

செய்திப்பிரிவு

பேரியம் ரசாயனம் கலந்து தயார் செய்யப்பட்ட பட்டாசுகள் மற்றும் சரவெடி பட்டாசுகளை வெடித்தால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''உச்ச நீதிமன்றம் தனது 29.10.2021ஆம் தேதியிட்ட தீர்ப்பில் 2016, 2017, 2018ஆம் ஆண்டுகளில் பல்வேறு வழக்குளில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையிலும், அதைத் தொடர்ந்து வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மீண்டும் வலியுறுத்தி, எதிர் வரும் தீபாவளி பண்டிகை மற்றும் இன்ன பிற நிகழ்வுகளின்போது சாதாரண வகையிலான பட்டாசுகளின் பயன்பாட்டிற்கு எந்தவிதமான தடையும் இல்லை எனவும், ஆனால் பொதுமக்களின் உடல் நலன் மற்றும் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கக் கூடிய பேரியம் ரசாயனம் கலந்து தயார் செய்யப்பட்ட பட்டாசுகள் மற்றும் சரவெடி போன்ற பட்டாசுகளைத் தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டுசெல்லவோ விற்பனை செய்யவோ அல்லது வெடிக்கவோ தடை விதித்து ஆணையிட்டுள்ளது.

மேற்படி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையான அளவில் செயல்படுத்தும் வகையில், தமிழ்நாட்டின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகளில், சரவெடி மற்றும் பேரியம் ரசாயனம் கலந்த பட்டாசுகள் தயாரிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்படி தடை செய்யப்பட்ட பட்டாசுகளைச் சேமித்து வைக்கவும், கொண்டுசெல்லவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மேற்படி தடை செய்யப்பட்ட பட்டாசுகளை, சரவெடி உட்பட பட்டாசு வகைகளை வெடிக்கக் கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேற்படி உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது அரசு விதிமுறைகளின்படி, குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது’’.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT