முதல்வர் பதவி வேண்டாம் என்று சொல்வதற்கு நான் ஒன்றும் துறவி அல்ல என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளராக ஆன போதே, அக்கூட்டணி முதல்வர் வேட்பாளராக அவர்தான் அறிவிக் கப்பட வேண்டும் என மதிமுக வினர் எதிர்பார்த்தனர். இதை மாவட்டங்கள்தோறும் நடந்த தேர் தல் ஆலோசனை கூட்டங்களில் கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தினர். மதுரையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், ‘கடந்த தேர்தல்களைப் போல பதவி ஆசையில்லை என்று கூறி, யாருக் கும் விட்டுக் கொடுக்கக்கூடாது, எல்லா திறமையும் பெற்றிருக்கும் நீங்கள் (வைகோ) மக்கள் நலக் கூட்டணி முதல்வர் வேட்பாளராக வேண்டும்’ என்றனர். அதற்கு வைகோ, ‘உங்கள் கட்டளையை மீற முடியாது. ஏற்கிறேன்’ என தனது விருப்பத்தை வெளிப்படுத் தினார்.
அதன்பிறகே மக்கள் நலக் கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் பற்றி பெரிய விவாதமே ஏற்படத் தொடங்கியது. உடனடியாக அதை மறுத்த வைகோ,தேர்தலுக்கு பிறகே முதல்வரை முடிவு செய் வோம் என அறிவித்து விவாதத் துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால், அந்த முடிவுக்கு மாறாக, விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக, அவரே முன்மொழிந்து அறிவித்துள்ளார். இதனால், வைகோ மீது அவரது கட்சியினர் வருத்தத்தில் உள்ளனர்.
இதுகுறித்து கேட்டபோது, ‘தி இந்து’விடம் வைகோ கூறியதாவது:
பாஜக ஆட்சிக் காலத்தில் என்னை மத்திய மந்திரியாக்க வேண்டும் என்று வாஜ்பாயே வற் புறுத்தினார். ஆனால், அப்போது அதனை மறுத்தேன். பொடா சட்டத்தில் 19 மாதங்கள் சிறையில் இருந்துவிட்டு வெளியே வந்ததும் நடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடாமல் இருந்ததை இப் போது பெரிய தவறாக நினைக் கிறேன். அந்தத் தேர்தலில் நான் போட்டியிட்டிருக்க வேண்டும்.
ஆனால், இப்போது சட்டப் பேரவைத் தேர்தலில் என்னை முதல்வர் வேட்பாளராக முன்னி றுத்திக் கொள்ளாமல் இருப்பது மிகச் சரியான முடிவே ஆகும். அதே நேரத்தில் முதல்வர் பதவி வேண்டாம் என்று சொல்ல நான் ஒன்றும் பெரிய துறவி கிடையாது. ஏனென்றால், இந்தத் தேர்தல் என்பது மிகப்பெரிய யுத்த களமா கும். இதில் ஒருபுறம் திமுகவும் இன்னொருபுறம் அதிமுகவும் பெரும் பண பலத்துடன் நிற்கின்றன. இந்த யுத்த களத்தில் ஒரு கூட்டணியை முன்னின்று இயக்குகிற சேனாதிபதியாக நான் சில முடிவுகளை எடுத்தே தீர வேண்டும்.
திமுகவும், பாஜகவும் விஜய காந்தை கூட்டணிக்கு கொண்டுவர எவ்வளவோ முயற்சித்தன. அதற் காக எதை செய்யவும் தயாராக இருந்தன. ஆனால், அவற்றை எல்லாம் உதறிவிட்டு மக்கள் நலக் கூட்டணியுடன் விஜயகாந்த் கைகோர்த்துள்ளார். ஊழல் ஒழிப்பு என்பதுதான் எங்களது எண்ணம். எனவே, விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்தோம். இதுதான் இப்போதைக்கு சரியான முடிவாகும்.
இந்த முடிவால் எனது கட்சிக் காரர்களுக்கும், தொண்டர்களுக் கும் பெரிய அளவில் மனவருத்தம் இருக்கலாம். ஆனால், தலைவர் சரியானதொரு முடிவைத்தான் எடுத்திருக்கிறார் என்பது அவர் களுக்கு நன்றாக புரியும்.