தமிழகம்

சமூக கட்டமைப்பை மேம்படுத்தவே விலையில்லா திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

செய்திப்பிரிவு

சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்தில்தான் இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் சார்பில், ‘இலவசங்கள், மானியங்கள் வளர்ச்சிக்கு உதவுமா அல்லது தடுக்குமா?’ என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு பேசியதாவது:

தமிழக அரசு சார்பில் கல்வி, சுகாதாரம், விவசாயம், போக்குவரத்து உட்பட பல்வேறு துறைகளில் விலையில்லா நலத்திட்டங்கள், மானிய நிதியுதவிகள் வழங்கப்படுகின்றன.

அவற்றை வளர்ச்சிக்கு தடையானவையாக பார்க்காமல் சமூக மேம்பாட்டுக்கான முதலீடாகவே அணுக வேண்டும். விலையில்லா திட்டங்களை எதிர்ப்பவர்கள் கரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கும்போது அமைதியாக உள்ளனர். ஏனெனில், இந்த சமூகத்தில் அனைவருக்குமான தேவைகள் மாறுபடுகின்றன. அவற்றை நிறைவேற்ற வேண்டியது நல்ல அரசின் கடமையாகும்.

தனக்கு தேவையில்லை என்பதற்காக மற்றவர்களுக்கு பயன்படும் திட்டங்களை எதிர்க்கக் கூடாது. சமூக கட்டமைப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை ஒருசேர மேம்படுத்துவது அவசியமாகும். அதற்கான பணிகளையே அரசு செய்து வருகிறது. அதேநேரம் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளில் மற்ற மாநிலங்களைவிட தமிழகம் நல்ல நிலையில்தான் உள்ளது.

போக்குவரத்து நெரிசல், பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணங்களை கருத்தில்கொண்டு மகளிருக்கான 50 சதவீத மானிய இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாகவே அரசு பேருந்துகளில் அவர்களுக்கு இலவச பயணத் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

குடும்ப பெண்களுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் நிச்சயமாக செயல்படுத்தப்படும். அதற்கான தரவுகளைச் சேகரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

கிராமப்புற பெண்கள் பலர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மிக்சி, கிரைண்டர் போன்ற பணிச்சுமையை குறைக்கும் உபகரணங்கள் தேவைப்படுகின்றன. ஆனால், தமிழகத்தில் சில மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால் வாஷிங் மெஷின் போன்ற பொருட்களை வழங்க முடியாது. எனவே, ஒரு திட்டத்தை செயல்படுத்தும்போது யாரெல்லாம் பயனாளிகள் என்று அரசு கண்டறிய வேண்டும்.

நலத்திட்டங்கள் தவறான புள்ளிவிவரங்களால் மக்களை முழுமையாக சென்றடைவதில்லை.

அந்த வகையில் இதற்கு முந்தைய ஆட்சியில் பயிர்கடன், நகைகடன் தள்ளுபடி போன்றவற்றில் தவறான தரவுகள் இடம்பெற்றது கண்டறியப்பட்டது. நலத்திட்டங்களை அமல்படுத்துதற்கான தரவுகளை மத்திய அரசின் ஆதார் திட்டத்தில் இருந்து முழுமையாக பெற முடியாது.

மேலும், ஆதாரில் கைரேகை உட்பட பல்வேறு போலியான ஆவணங்கள் இருக்கின்றன. இதனால் அரசின் திட்டங்கள் பயனாளிகளுக்கு முழுமையாக செல்வதை உறுதி செய்வதில் சிரமங்கள் உள்ளன. தகவல் மேம்பாடு தான் நலத்திட்டங்களை முழுமைப்படுத்தும்.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT