மீனவர்களுக்கு டீசல் மானியம் கொடுத்தது திமுக ஆட்சிதான் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை சீனிவாசபுரத்தில் தென்சென்னை திமுக வேட்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து அக்கட்சியின் பொரு ளாளர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக் கிழமை பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
எந்தச் சூழ்நிலையிலும் எந்த நிலையிலும் உங்களுக்கு பணியாற்றுபவர்கள் நாங்கள். ஹெலிகாப்டரில் பறந்து வந்து வாக்கு கேட்கவில்லை. 3 ஆண்டு களாக என்ன செய்தீர்கள் என்று மக்கள் கேள்வி கேட்பார்களே என்ற அச்சத்தில்தான் அவர்கள் சாலை வழியாக வருவதில்லை.
நாங்கள் ஆட்சியில் இருந்த போது பல நல்ல காரியங்களைச் செய்திருக்கிறோம். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட் டாலும் மக்களுக்காகப் பணியாற்று வதால்தான் உரிமையோடு வாக்கு கேட்டு வந்துள்ளோம்.
நொச்சிக்குப்பம், டுமிங் குப்பம் பகுதிகளில் திமுக ஆட்சிக் காலத்தில் முதன்முதலாக குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டன. சென்னையில் 40 ஆண்டுகள் ஆகிவிட்ட குடி யிருப்புகளையும், மற்ற பகுதிகளில் 30 ஆண்டுகள் ஆகிவிட்ட குடி யிருப்புகளையும் புதிதாக கட்டிக் கொடுக்க கருணாநிதி உத்தர விட்டார்.
1974-ல் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகம் தொடங்கினார். 2007-ல் மீனவர் நல வாரியம் அமைத்தார். இதன்மூலம் ரூ.4.52 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மீனவர் இறந்தால், அவரது குடும்பத்துக்கு வழங்கப்பட்ட ரூ.1 லட்சம் நிதி, ரூ.3 லட்சமாக உயர்த்தி தரப்பட்டது. ஈமச்சடங்குக்காக ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டது. மீனவர்களுக்கு டீசல் மானியம் கொடுத்ததும் திமுக ஆட்சிதான்.
மீனவர்களின் நலனுக்காக மத்தியில் தனியாக அமைச்சகம் ஒன்றை ஏற்படுத்தவும், மீனவ மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவும் முயற்சி மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கருணாநிதி அறிவித்துள்ளார்.
அவர் சொன்னதைச் செய்வார். சொல்லாததையும் செய்வார். ஆனால், ஆளுங்கட்சியினர் சொன்னதைச் செய்யவில்லை. அவர்களுக்குப் பாடம் புகட்ட இத்தேர்தலை மக்கள் நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்