பிரதிநிதித்துவப் படம். 
தமிழகம்

10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று (அக். 23) வெளியிட்ட அறிவிப்பு:

"லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் (1.5 கி.மீ. உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, இன்று கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், தென் மாவட்டங்கள், மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 9 செ.மீ. மழையும், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், ஈரோடு மாவட்டம் பவானி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், திருப்பத்தூர், விருதுநகர் மாவட்டம் சாத்தூர், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஆகிய பகுதிகளில் தலா 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்கக் கடல் பகுதிகள்:

26.10.2021, 27.10.2021: மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அரபிக் கடல் பகுதிகள்:

23.10.2021, 24.10.2021: கேரளக் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., அவ்வப்போது 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்".

இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT