புதுச்சேரியில் புதிதாக 57 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (அக். 22) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 3,126 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இவற்றில் புதுச்சேரி-31, காரைக்கால்-14, மாஹே-12 பேர் என மொத்தம் 57 பேருக்கு (1.82 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனாமில் புதிதாக யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை.
இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்து 621 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 93 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 361 பேரும் என 454 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மேலும், புதுச்சேரியைச் சேர்ந்த 77 வயது முதியவர் தொற்று பாதிப்புக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,853 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.45 சதவீதமாக உள்ளது. புதிதாக 56 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 25 ஆயிரத்து 314 (98.19 சதவீதம்) ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் இதுவரை 10 லட்சத்து 92 ஆயிரத்து 656 பேருக்கு (இரண்டாவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’’ என்று அருண் தெரிவித்துள்ளார்.