தமிழகம்

ஊரடங்கில் மேலும் தளர்வுகளா?- முதல்வர் நாளை ஆலோசனை

செய்திப்பிரிவு

ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கோயில்களில் வார இறுதிநாட்களில் பொதுமக்கள் தரிசனத்துக்கு கடந்த வாரம் முதல் அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 1-ம் தேதி முதல் 1 - 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

இதற்கிடையில், தமிழகத்தில் அனைத்து நகரங்களிலும் தீபாவளிபண்டிகைக்கான ஜவுளி, இனிப்புகள், பட்டாசு உள்ளிட்ட பொருட்களை வாங்க மக்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர். தமிழகத்தில் கரோனா பாதிப்பும் சிறிது சிறிதாக குறைந்துகொண்டே வருகிறது. இதைத் தொடர்ந்து, மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

தலைமைச் செயலகத்தில் நாளை காலை 11.30 மணிக்கு நடக்கும் இக்கூட்டத்தில், தலைமைச்செயலர், மருத்துவத் துறை அதிகாரிகள், பல துறைகளின் செயலர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். தீபாவளி நவம்பர் 4-ம் தேதி கொண்டாடப்பட உள்ளநிலையில், பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பரவலாக உள்ளது.இதுகுறித்தும் ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT