புதுச்சேரி சுதந்திர பொன்விழா நகர்ப் பகுதியில் உள்ள 7 தெரு நாய்களை இறைச்சி மூலம் விஷம் வைத்து கொலை செய்தோரை போலீஸார் தேடி வருகின்றனர்.
வாயில்லா ஜீவன்களைக் கொன்றவர்களைக் கடுமையாக தண்டிக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புதுச்சேரி காமராஜர் நகர்ப் பகுதியில் உள்ளது சுதந்திர பொன் விழா நகர். அப்பகுதியில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் தனியாக அமைந்துள்ளது. 200க்கும் மேற்பட்டோர் இக்குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர்.
இந்தப் பகுதியில் 15 க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் இருந்தன. இதனை அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளே பராமரித்து வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று 10க்கும் மேற்பட்ட நாய்கள் திடீரென வாந்தி எடுத்தும், உயிருக்கு துடித்துக்கொண்டும் இருந்தன.
இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தண்ணீர், மருந்து கொடுத்துள்ளனர். இருந்த போதும் 7 நாய்கள் அடுத்தடுத்து உயிரிழந்தன.
அப்பகுதி மக்கள் இது குறித்து கோரிமேடு தன்வந்திரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டதில் அருகில் வசிக்கும் சிலர் நாய்களைக் கொல்லும் நோக்கிலேயே கோழிக்கறி மூலம் செடிகளுக்கு பயன்படுத்தும் கிருமி நாசினிகளை கொண்டு கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
அப்பகுதியில் வெளியாட்களை அங்குள்ள நாய்கள் விடாததாலும், அப்பகுதியில் குற்றச் சம்பவங்ளை தடுக்கும் வகையிலும் நாய்கள் இருந்துள்ளதால் கல்மனம் கொண்ட சிலர் இதனை செய்திருப்பதும் தெரியவந்ததை அடுத்து 2 பேரை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற்னர்.
கால்நடைத்துறை அதிகாரிகள் உடல்கூறு பரிசோதனை செய்து சென்றுள்ளனர். 15 நாட்கள் கழித்துதான் பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொடூர மனம் படைத்த சிலரால் வாயில்லா விலங்குகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்