கோயில் நகைகளை உருக்குவதை எதிர்த்து, வரும் 26-ம் தேதி மாநிலம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நகைகளை உருக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் கோவை கோனியம்மன் கோயில் அருகே இந்து முன்னணியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோரிக்கை மனுவை, கோனியம்மனின் பாதத்தில் வைத்து வேண்டுதல் நடத்தினர். அதைத் தொடர்ந்துஅம்மன் வேடம் அணிந்த பெண்ணிடம் இருந்து நகைகளை ஒருவர் எடுப்பது போலவும், அதை இந்து முன்னணி அமைப்பினர் தடுப்பது போலவும் நாடகம் நடத்தப்பட்டது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘கோயில்களில் உள்ள நகைகளை உருக்குவதற்கு தமிழக அரசுக்கு எந்தஅதிகாரமும் இல்லை. தமிழகத்தில் கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. அதனை மீட்க ஆர்வம் காட்டாமல், இதுபோன்ற நடவடிக்கைகளில் தமிழக அரசு வீணாக நேரம் செலவழித்து வருகிறது. தங்க நகைகளை உருக்கும் திட்டத்தின் மூலம் ஊழல் நடக்க வாய்ப்பு உள்ளது. பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய நகைகள், கோயில்களுக்குத்தான் பயன்பட வேண்டும். அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும். அதற்காக இந்து முன்னணி இந்த பிரச்சார யாத்திரையை நடத்தி வருகிறது. வரும் 26-ல் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்’’ என்றார்.