பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று (அக்.18) வெளியிட்ட அறிவிப்பு:

"வெப்பச் சலனம் காரணமாக, இன்று கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பைநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, கோயம்புத்தூர் மாவட்டம் சோலையாற்றில் 11 செ.மீ., சின்னக்கல்லாறு, சின்கோனா பகுதிகளில் தலா 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

குறைந்தபட்சமாக, கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை, புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில், சென்னை பெரம்பூர், கன்னியாகுமரி மாவட்டம் சூரலக்கோடு, தென்காசி மாவட்டம் ஆயக்குடி, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, தேனி மாவட்டம் தேக்கடி, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, கன்னியாகுமரி மாவட்டம் புத்தான் அணை, புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் ஆகிய பகுதிகளில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது".

இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT