மழைக் காலத்தில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருவதால் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கொடைக்கானலுக்கு வந்த சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் நேற்று அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் 5 கோடியே 32 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. மழைக் காலங்களில் டெங்கு நோயைக் கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதனால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கொடைக்கானல் நகர் பகுதி, பண்ணைக்காடு பேரூராட்சி, பத்து கிராம ஊராட்சிகளில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முகக்கவசம் அணியாமல் வந்தால் அந்தந்த பகுதிகளில் உள்ள வியாபாரிகள் சுற்றுலாப் பயணிகளை முகக்கவசம் அணிவதற்கு வலியுறுத்த வேண்டும் என்றார்.