தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7 வயது சிறுவனின் தொண்டையில் சிக்கிய கோலி குண்டு மற்றும் 5 வயது சிறுவனின் காதில் சிக்கிய சிறிய ரக பேட்டரியை அறுவை சிகிச்சையின்றி மருத்துவர்கள் அகற்றினர்.
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் நகரம் பெரியார் வீதியில் வசிப்பவர் சிலம்பரசன். இவரது மகன் அஸ்வின்(7). இவர், தனது வீட்டில் கடந்த 13-ம் தேதி மாலை விளையாடிக் கொண்டிருந்தபோது, கையில் வைத்திருந்த ‘கோலி குண்டு விழுங்கிவிட்டார். இதனால் தண்ணீர் கூட குடிக்க முடியால் தவித்துள்ளார். இதையறிந்த அவரது பெற்றோர், சிறுவனை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு காது, மூக்கு, தொண்டை பிரிவு துறைத் தலைவர் இளஞ் செழியன் தலைமையில் சிறப்பு மருத்துவர்கள் சிந்துமதி, கமலக் கண்ணன், ராஜாசெல்வம் உள் ளிட்ட மருத்துவக் குழுவினர் பரி சோதனை செய்தனர். பின்னர் அவர்கள், எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது அஸ்வினின் தொண்டை பகுதியில் உணவுக் குழாய் மேல் பகுதியில் கோலி குண்டு சிக்கி கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அறுவை சிகிச்சை பிரிவுக்கு அழைத்து செல்லப்பட்ட சிறுவனுக்கு மயக்கவியல் சிறப்பு மருத்துவர் செந்தில்ராஜாவை வரவழைத்து மயக்க மருந்து செலுத்தப்பட்டது. பின்னர், அறுவை சிகிச்சையின்றி சிறுவன் அஸ்வினின் தொண்டை யில் சிக்கிய கோலி குண்டு அகற்றப்பட்டது.
மற்றொரு சம்பவம்
இதேபோல், செங்கம் அடுத்த மேல்புழுதியூர் கிராமத்தில் வசிப்பவர் முபாரக்பாஷா. இவரது மகன் முக்தர்கான்(5). இவர், கடந்த 12-ம் தேதி காது வலியால் துடித்துள்ளார். இதனால், செங்கத்தில் உள்ள மருத்துவ மனைக்கு, அவரது பெற்றோர் அழைத்துச் சென்றும் பலனில்லை. இதையடுத்து, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த 13-ம் தேதி அழைத்து வந்தனர்.
அங்கு சிறுவனை சிறப்பு மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்து பார்த்த போது, காதின் நடு பகுதியில் சிறிய ரக பேட்டரி சிக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, சிறுவனுக்கு மயக்க மருந்து கொடுத்து, அறுவை சிகிச்சையின்றி சிறுவன் முக்தர்கான் காதில் இருந்த சிறிய ரக பேட்டரியை (கை கடி காரத்துக்கு பயன்படுத்துவது) அகற்றினர். பேட்டரியில் உள்ள அமிலம் வெளியேறி இருந்தால், காதில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என மருத்து வர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள் கூறும்போது, “குழந்தைகள் மற்றும் சிறுவர் களிடம் சிறிய ரக பொருட்களை விளையாட கொடுக்கக்கூடாது. பெற்றோர் மிகுந்த கவனத்துடன் பிள்ளைகளை பராமரிக்க வேண் டும்” என அறிவுறுத்தினர்.