கலாமின் பிறந்த நாளில், இந்தியாவின் எதிரி என அவர் கருதிய வறுமையை ஒழிக்க உறுதியேற்போம் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் 90-வது பிறந்த தினம் இன்று (அக். 15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, ராமேஸ்வரம் பேக்கரும்பில் அமைந்துள்ள கலாமின் தேசிய நினைவகம் முழுவதும் வண்ண விளக்குகளாலும், கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடம் வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கலாம் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் இன்று தன் ட்விட்டர் பக்கத்தில், "ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து, தனது படிப்பாலும் விடாமுயற்சியாலும் இந்தியாவின் ஏவுகணை நாயகன் எனப் பெயர் பெற்று; பின்னாளில் இந்தியக் குடியரசின் முதல் குடிமகனாகவும் உயர்ந்த அப்துல் கலாமின் பிறந்த நாளில், இந்தியாவின் எதிரி என அவர் கருதிய வறுமையை ஒழிக்க உறுதியேற்போம்!" எனப் பதிவிட்டுள்ளார்.