தமிழகம்

தீபாவளிக்காக காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை ரேஷன் கடைகளை இயக்க உத்தரவு

செய்திப்பிரிவு

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி ரேஷன் கடைகளைக் கூடுதல் நேரம் இயக்க தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் தலைமையில் கடந்த 11/10/2021 அன்று ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

இதில், அமைச்சர் வழங்கிய அறிவுரைகளின் படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைத்தாரர்களும் பயன்பெறும் வகையில் நவம்பர் மாதத்திற்கான சிறப்பு அத்தியாவசியப் பொருட்களை கூடுதல் நேரம் கடைகளைத் திறந்துவைத்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, நவம்பர் 1, 2, மற்றும் 3 தேதிகளில் நியாயவிலைக் கடைகள் காலை 8.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை திறக்கப்பட்டிருக்கும். எனவே, ரேஷன் அட்டைத்தாரர்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

இதற்கிடையில், ரேஷன் பொருட்கள் விநியோகம்தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சமீபகாலமாக சில சமூக ஊடகங்களில், மத்திய, மாநில அரசு அலுவலர்கள், ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மேல் உள்ள குடும்பங்கள், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள், 3 அறைகள் கொண்ட கான்கிரீட் வீடுகளில் குடியிருப்போருக்கு ரேஷன் அரிசி விநியோகம் இல்லை என்று பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. பொது விநியோகத் திட்டத்தில்எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

தற்போது அரிசி பெற்றுவரும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களும், அனைத்து பொருட்களையும் பெறலாம். சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள்முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என அரசு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT