தமிழகத்தில் இன்று 6-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று (அக். 14) வெளியிட்ட அறிவிப்பு:
"வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, இன்று திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய வடமாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் ஆகிய பகுதிகளில் தலா 8 செ.மீ., குறைந்தபட்சமாக, ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம், கோவை மாவட்டம் வால்பாறை, கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, வேலூர் மாவட்டம் காட்பாடி, தென்காசி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் தலா 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
குறிப்பு: மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.
மத்தியக் கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
வங்கக் கடல் பகுதிகள்:
15.10.2021, 16.10.2021: குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
15.10.2021: அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதிகள், ஆந்திரக் கடற்கரையோரப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், அவ்வப்போது 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
16.10.2021: மத்திய வங்கக்கடல், வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், அவ்வப்போது 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
17.10.2021, 18.10.2021: மத்திய வங்கக்கடல், வடக்கு வங்கக்கடல் பகுதிகள், மேற்கு வங்கம், வங்க தேசம், ஒடிசா கடற்கரையோரப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும் அவ்வப்போது 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அரபிக்கடல் பகுதிகள்:
14.10.2021: தென்கிழக்கு அரபிக்கடல், மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
15.10.2021: தென்கிழக்கு அரபிக்கடல், மத்திய கிழக்கு அரபிக்கடல், கேரள, கர்நாடக மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், அவ்வப்போது 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்".
இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.