ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை அடைந்துள்ள நிலையில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி பதவி விலக வேண்டுமென அக்கட்சியின் முன்னாள் செய்திதொடர்பாளர் புகழேந்தி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து நேற்று மாலை அவர் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நான் முன்பே கூறியது போல் 80 சதவீதம் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவின் தோல்வி மிகுந்த வேதனையளிக்கிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் மாபெரும் வெற்றி பெற்ற இயக்கமாக இருந்த அதிமுக தேய்ந்து வருகிறது. கட்சி இயக்கம் முற்றிலும் சிதைந்துள்ளது.
கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மீதான அதிருப்தியால் தான், திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக மிகப்பெரிய தோல்வி அடைந்துள்ளது. வெற்றி தோல்வி சகஜம் என்றாலும் கூட அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துச் செல்லி, நாம் மீண்டும் வெற்றி பெறுவோம் என்று அறிக்கை கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் திமுக கொல்லைபுறமாக வந்து வென்று விட்டார்கள் என்று சொல்லி, வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து கூறவில்லை.
அதிமுக நன்மை அடைய வேண்டுமெனில் பழனிசாமி கட்சியிலிருந்து வெளியேற வேண்டும். பழனிசாமி வெளியே சென்றால் தான்கட்சியை காப்பாற்ற முடியும். ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும், கட்சிக்கும் அவர் துரோகம் செய்துள்ளார்.
அதிமுக தோல்வியின் காரணமாக தொண்டர்கள் துவன்டு போய் உள்ளனர். ஓ.பி.எஸ்ஸை நினைத்து நான் வேதனை படுகிறேன். இன்னும் கட்சியின் மீது பற்றோ, வேகமோ இல்லாவிட்டால், புதுச்சேரியில் அதிமுக பூஜ்ஜியமாகிவிட்டது போல, தமிழகத்திலும் சரிவை சந்திக்கும். பழனிசாமியை ஓ.பி.எஸ் கட்சியிலிருந்து நீக்கவில்லை என்றால், தொடர்ந்து அதிமுக தோல்விஅடையும். பழனிசாமி, வேலுமணி, தங்கமணி தாமாகவே கட்சியில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும். இல்லையெனில், தமிழகம் முழுவதும் போராட்டத்தை நடத்துவேன். கட்சியை காப்பாற்ற உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறோம். கொடநாடு கொலை வழக்கில் பழனிசாமியை கைது செய்ய வேண்டும் என்றார்.