தமிழகம்

திருச்சியில் 46 நாட்கள் தொடர் உண்ணாவிரதத்தைத் தொடங்கிய விவசாயிகள்

ஜெ.ஞானசேகர்

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் 46 நாட்கள் தொடர் உண்ணாவிரதத்தை இன்று திருச்சியில் தொடங்கியுள்ளனர்.

''வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். வேளாண் விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். விவசாயிகள் அறுவடை செய்த நெல் மணிகள், வீணாகாமல் தடுக்கும் வகையில் உடனடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும். உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் விவசாயிகளை காரால் மோதிக் கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும்" என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொது இடத்தில் உண்ணாவிரதம் இருக்க போலீஸார் அனுமதி மறுத்ததை அடுத்து, சங்கத்தின் மாநில அலுவலகமான தனது வீட்டு வளாகத்திலேயே அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

போராட்டம் குறித்து அய்யாக்கண்ணு கூறும்போது, ''டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்குப் பல்வேறு விவசாய சங்கங்கள் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றன. ஆனால், தேசிய- தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தினரை மட்டும் டெல்லிக்குச் செல்ல போலீஸார் அனுமதி அளிப்பதில்லை. உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்தபோது, வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று தடுக்கின்றனர். போலீஸார் எங்களைத் தடுக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், போலீஸார் அதை மதிப்பதில்லை.

வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால் குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது என்பதால், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தைத் தொடங்கி நவ.26-ம் தேதி ஓராண்டு நிறைவடைகிறது.

மேலும் உத்தரப் பிரதேசத்தில் திட்டமிட்டு விவசாயிகளை காரால் மோதி கொன்றவர்களுக்குத் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் நவ.26-ம் தேதி வரை 46 நாட்களுக்குத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளோம்'' என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT