தமிழகம்

விழுப்புரத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அரசுப் பள்ளி ஆசிரியர் மாரடைப்பால் உயிரிழப்பு

எஸ்.நீலவண்ணன்

விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அரசுப் பள்ளி ஆசிரியர் மாரடைப்பால் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (அக்.9) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் ,மைலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வீடூர் வாக்குச்சாவடியில் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்ட மணிவாசகம் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

நாகர்கோயில் மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்ட இவர், விழுப்புரம் வா.பகண்டை பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பொருளாதார ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். தனது குடும்பத்தினருடன் விழுப்புரத்தில் வசித்துவந்த மாணிக்கவாசகம், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக வீடூர் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து நேற்று மாலையில் இருந்து தேர்தல் பணி செய்து வந்த நிலையில், இரவு சுமார் 1 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை உடனடியாக அருகேயுள்ள பொம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். மருத்துவமனையில் மாணிக்கவாசகம் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மைலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மாணிக்கவாசகத்தின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT