தமிழகம்

புதுச்சேரியில் 87 பேருக்கு கரோனா தொற்று: மேலும் ஒருவர் உயிரிழப்பு

அ.முன்னடியான்

புதுச்சேரியில் புதிதாக 87 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் இன்று (அக். 8) வெளியிட்டுள்ள தகவலில்: ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 5,652 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இவற்றில் புதுச்சேரியில் 58, காரைக்காலில் 21, மாஹேவில் 8 பேர் என மொத்தம் 87 பேருக்கு (1.54 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனாமில் புதிதாக யாருக்கும் தொற்று இல்லை.

இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 893 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 107 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 539 பேரும் என 646 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில் புதுச்சேரி கதிர்காமம் ராதாகிருஷ்ணன் நகரைச் சேர்ந்த 90 வயது மூதாட்டி கரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,845 ஆக உயர்த்துள்ளது. இறப்பு விகிதம் 1.45 சதவீதமாக உள்ளது.

இதனிடையே புதிதாக 95 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 24 ஆயிரத்து 402 (98.04 சதவீதம்) ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 10 லட்சத்து 40 ஆயிரத்து 861 பேருக்கு (இரண்டாவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.’’இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT