துளசிதாசின் உடலை வாங்க மறுத்து செங்கல்பட்டு மருத்துவமனையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர். 
தமிழகம்

மதுவை அதிக விலைக்கு விற்றதாகக் கூறி ஒரகடத்தில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு கத்திக்குத்து: ஒருவர் உயிரிழப்பு; ஊழியர்கள் போராட்டம்

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் பகுதியில் 4109 என்ற பதிவு எண்கொண்ட டாஸ்மாக் கடை உள்ளது. இக்கடையில் வாலாஜாபாத் அடுத்த கோவிந்தவாடி அகரம் பகுதியைச் சேர்ந்த ராம்(40) மற்றும்ஒரகடம் அருகே உள்ள வாரணவாசியைச் சேர்ந்த துளசிதாஸ்(43) ஆகியோர் விற்பனையாளர்களாக பணியாற்றி வந்தனர்.

இவர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் இரவு 9 மணியளவில் மதுக்கடையை பூட்டிவிட்டு பைக்கில் செல்ல முயன்றபோது திடீரென அங்கு வந்த மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் இருவரையும் சரமாரியாக தாக்கியது. இந்தகத்திக் குத்தில் துளசிதாஸ் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தார். ராமுபலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த ஒரகடம் போலீஸார் ராமுவைமீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மதுவை அதிக விலைக்கு விற்றதால் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்தக் கொலை நடைபெற்றுள்ளதாக போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்த போலீஸார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் உயிரிழந்த துளசிதாசின் உடலை வாங்க மறுத்து,தமிழ்நாடு அனைத்து டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. உயிர் இழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.50லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்,அவரது வீட்டில் ஒருவருக்கு அரசுவேலை வழங்க வேண்டும், கொலையாளிகளை உடனடியாககைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய போலீஸாருடன் டாஸ்மாக்பணியாளர்கள் வாக்குவாதத்தில்ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும்டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அரசுடன் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தை முடிவு பெறாத பட்சத்தில் நாளையும் கடையடைப்பு தொடரும் என போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT