தமிழகம்

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வசூல் செய்வோரை நம்பி ஏமாற வேண்டாம்: காவல் ஆணையர் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பணம் வசூலிப்போரை நம்பி ஏமாற வேண்டாம் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.

அண்மைக்காலமாக அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அண்மையில் கல்வித் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, சென்னை டிபிஐ வளாகத்துக்கு வரவழைத்து, போலி பணி நியமன ஆணை வழங்கி சிலர் மோசடியில் ஈடுபட்டனர்.

இதேபோல, முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரை பயன்படுத்தியும் மோசடி நடந்துள்ளது.

இதுபோன்ற மோசடிகள் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறும்போது, ``அரசு வேலை வாங்கித் தருவதாகவும், அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் தொடர்பு உள்ளது என்று கூறியும், அவர்களுடன் எடுத்த புகைப்படங்களைக் காட்டி நம்பிக்கையூட்டி, பொதுமக்களை சிலர் ஏமாற்றுகின்றனர். அரசு வேலைக்காக தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்'' என்றார்.

SCROLL FOR NEXT