தமிழகத்தில் பேனர்கள் வைப்பதை முழுமையாகத் தடை செய்யும் வகையில், உரிய விதிகளை வகுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரத்தில் முன்னாள் எம்எல்ஏ இல்லத் திருமணத்துக்கு வந்த அமைச்சர் பொன்முடியை வரவேற்று, பேனர் வைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 12 வயதுச் சிறுவன் தினேஷ் மின்சாரம் தாக்கி பலியானார். இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு, விழுப்புரத்தில் சட்டவிரோதமாக பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, விழுப்புரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று (அக். 05) விசாரணைக்கு வந்தபோது, கொடிக் கம்பங்கள், பேனர்கள் வைக்கக்கூடாது என, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறி, இந்தக் கொடிக் கம்பங்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
மேலும், இது தொடர்பான ஒரு வழக்கில், திமுக தரப்பில் பேனர்கள் வைக்கப்படமாட்டாது என்று உத்தரவாதம் அளித்து, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.
இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பேனர்கள் வைப்பதற்கு ஒப்பந்தம் பெற்றிருந்த ஒப்பந்ததாரர்தான் 12 வயதுச் சிறுவனைப் பணியில் அமர்த்தி இருக்கிறார். இந்தச் சம்பவத்தை அடுத்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகவும், விழுப்புரம் முதன்மை நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், பலியான சிறுவனின் குடும்பத்தினருக்கு தற்காலிகமாக ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், கடந்த 2019-ம் ஆண்டே முதல்வர் மு.க.ஸ்டாலின் பேனர்கள் வைக்கக்கூடிய நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாட்டேன் எனக் கூறி உள்ளதாகவும், கட்சித் தொண்டர்களை பேனர்கள் வைக்கக் கூடாது என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, அனுமதியின்றி பேனர்கள் வைப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று குறிப்பிட்ட தலைமை நீதிபதி, மாவட்டங்களுக்கும், தாலுக்கா நீதிமன்றங்களுக்கும் தான் சென்றபோது ஏராளமான பேனர்களைப் பார்த்ததாகவும் தெரிவித்தார்.
பின்னர், பேனர்கள் வைப்பதை முழுமையாகத் தடை செய்யும் வகையில், உரிய விதிகளை வகுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்குத் தொடர்பாக தமிழக அரசு, திமுக ஆறு வாரங்களில் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தனர்.