தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:
தசைச்சிதைவு மற்றும் முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடந்த 2015 முதல் வழங்கப்பட்ட பேட்டரியால் இயக்கப்படும் வீல் சேர்கள் தரமற்றவையாக உள்ளன. பெங்களூருவை சேர்ந்த குறிப்பிட்ட நிறுவனத்துக்குமட்டுமே அந்த டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.
தரமற்ற வீல் சேர்களை பயன்படுத்தியதால் மாற்றுத் திறனாளிகள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர். பழுதடைந்த வீல் சேர்களை சர்வீஸ் செய்வதற்கு எந்த சேவை நிறுவனங்களும் இல்லை. எனவே,கடந்த ஆட்சியின்போது வழங்கப்பட்ட பேட்டரி வீல் சேர்களை திரும்பப் பெற வேண்டும். பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரப்பட்டிருந்தது.
தலைமை நீதிபதி சஞ்ஜிப்பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து தமிழக அரசு 6 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டுவிசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.