தமிழகம்

அதிமுக நிர்வாகிகளை திமுகவில் சேரும்படி கூறி மிரட்டுவதாக புகார்

செய்திப்பிரிவு

அதிமுக நிர்வாகிகளை திமுகவில் சேரும்படி கூறி மிரட்டுகின்றனர் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டி உள்ளார்.

இதுதொடர்பாக, கரூர் எஸ்பி ப.சுந்தரவேலுவிடம் நேற்று புகார் அளித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக நிர்வாகிகளை திமுகவில் சேரும்படியும், இல்லாவிட்டால் தேர்தல் பணியாற்றக் கூடாது என்றும் கூறி மிரட்டுகின்றனர். தோல்வி பயம் காரணமாக அராஜகம் செய்து தேர்தலில் வெற்றி பெறலாம் என நினைக்கின்றனர்.

கரூரில் கடந்த 2-ம் தேதி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், நான் முகக்கவசம் அணிந்து மரக்கன்றுகள் வழங்கியும், என் மீது போலீஸார் தொற்றுநோய் பரவல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதேநேரம், வெள்ளியணையில் திமுக நடத்திய விழாவில் கூட்டம் கூடியதற்கு வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

அரசு சுவரில் விளம்பரம் செய்திருப்பதாக அதிமுகவின் விளம்பரம் அழிக்கப்பட்டுள்ளது. ஆனால், திமுகவினரின் விளம்பரத்தை அழிக்க முயன்ற வட்டார வளர்ச்சி அலுவலரை திமுகவினர் மிரட்டுகின்றனர். இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், திமுகவினரின் அராஜகத்தைக் கண்டித்து கரூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.

SCROLL FOR NEXT