ஈரானுடன் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தியதாக சவுதி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சவுதி அரேபிய வெளியுறவுத்துறை அமைச்சர் பைசல் கூறும்போது, “ பேச்சுவார்த்தை ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சனையைத் தீர்க்க இந்தப் பேச்சுவார்த்தை உதவும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
சவுதி - ஈரான் இடையே பேச்சுவார்த்தை எங்கு நடைபெறுகிறது என்ற தகவலை அவர் தெரிவிக்கவில்லை. சவுதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதை ஈரானும் உறுதி செய்துள்ளது.
ஈரான் முன்னாள் அதிபர் ஹசன் ரவ்ஹானி ஆட்சியில் இருக்கும்போது சவுதியுடனான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டது. இதனைத் தற்போது ஈரான் அதிபராக உள்ள இப்ராஹிம் ரைசி தொடர்கிறார்.
பின்னணி:
சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் வளப்பகுதியான ஹிஜ்ரா குரையாஸில் அராம்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலுக்கு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றனர். எனினும் இதன் பின்னணியில் ஈரான் உள்ளதாக சவுதி, அமெரிக்கா ஆகிய நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன.
இதனால் ஈரான் - சவுதி இடையே பதற்றம் நீடித்தது. இந்த நிலையில் பேச்சுவார்த்தை மூலம் சமாதானத்தை ஏற்படுத்த இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.