டிடிவி தினகரன்: கோப்புப்படம் 
தமிழகம்

நெல் கொள்முதல்; விவசாயிகளை மேலும் வதைக்கும் புதிய விதிமுறைகள்: தினகரன் கண்டனம்

செய்திப்பிரிவு

விவசாயிகளின் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப செயல்படுவதுதான் உண்மையான விவசாய நலன் என்பதை திமுக அரசு உணருமா என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (அக். 02) தன் ட்விட்டர் பக்கத்தில், "விவசாயிகளை அலைக்கழிக்கும் விதமாக, நெல் கொள்முதலில் ஆன்லைன் பதிவு உட்பட தமிழக அரசு கொண்டு வந்திருக்கும் புதிய நடைமுறையை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்துகிறேன்.

ஏற்கெனவே நேரடி கொள்முதல் நிலையங்களைப் போதுமான அளவுக்கு திறக்காததால், விவசாயிகள் கடும் இன்னலுக்கும், இழப்புக்கும் ஆளாகி வருகின்றனர். கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் சேதமடைந்து வருகின்றன.

இதையெல்லாம் சரிசெய்து விவசாயிகளிடமிருந்து விரைவாக நெல் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய திமுக அரசு, அதற்கு மாறாக நெல் கொள்முதலில் புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்து விவசாயிகளை மேலும் வதைப்பது கடும் கண்டனத்துக்குரியது.

பெயரளவுக்கு விவசாயத்துக்கு தனி பட்ஜெட் போட்டால் மட்டும் போதாது; விவசாயிகளின் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப செயல்படுவதுதான் உண்மையான விவசாய நலன் என்பதை திமுக அரசு உணருமா?".

இவ்வாறு தினகரன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT