வீரபாண்டி ராஜா: கோப்புப்படம் 
தமிழகம்

வீரபாண்டி ராஜா மறைவு: தனிமனித இழப்பல்ல; தூண் சாய்வதுபோல: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

செய்திப்பிரிவு

திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் வீரபாண்டி ராஜா காலமானார். அவருடைய மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் இன்று (அக். 02) வெளியிட்ட இரங்கல் செய்தி:

"சேலத்துச் சிங்கம் வீரபாண்டியாரின் மகனும் சேலம் மண்டலத்தில் திமுகவை வளர்க்கும் வீரனாகவும் வலம் வந்தவர் வீரபாண்டி ராஜா. இனிமையாய் பழகியும் அருமையான குணத்தாலும் அனைவரையும் ஈர்க்கும் பண்பு கொண்டவர் ராஜா. எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் அதனைத் திறம்பட செய்து முடிக்கக் கூடியவர்.

இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர், மாவட்டச் செயலாளர், தேர்தல் பணிக்குழுச் செயலாளர் எனக் கட்சிப் பொறுப்புகளில் சிறப்பாகச் செயல்பட்டதோடு சட்டப்பேரவை உறுப்பினராகவும் திறம்பட மக்கள் பணியாற்றியவர் ராஜா.

முதல்வர் ஸ்டாலின்: கோப்புப்படம்

இரண்டு நாட்களுக்கு முன்னால் சேலத்துக்கு அரசு விழாவுக்குச் சென்றிருந்தபோதுகூட வீரபாண்டி ராஜாவைச் சந்தித்தேன். அன்போடு பேசிக் கொண்டு இருந்தேன். அந்த வெள்ளை உள்ளம் கொண்ட புன்சிரிப்பை மறக்க முடியவில்லை.

மிக இளமைக் காலத்தில் செழியனை இழந்தோம். மருத்துவமனை வாசலில் தலைவர் கருணாநிதியே வாய் விட்டுக் கதறும் அளவுக்கு நம்மை விட்டுப் பிரிந்தார் வீரபாண்டியார். இதோ இப்போது வீரபாண்டி ராஜா. வீரபாண்டியார் குடும்பத்துக்கு என்ன ஆறுதல் சொல்வது? என்னை நானே எப்படித் தேற்றிக் கொள்வது? வீரபாண்டி ராஜா போன்றோர் மறைவு தனிமனித மறைவு அல்ல; தூண் சாய்வது போல!

எந்நாளும் அவர் புகழ் நிலைத்திருக்கும். திமுக தொண்டர்கள் மனதில் எந்நாளும் ராஜா வாழ்வார்.

வீரபாண்டியார் குடும்பத்துக்கும் திமுக செயல்வீரர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்".

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT