தமிழகம்

ஜிஎஸ்டி குறித்து தெரியாமல் பேசும் எம்பிக்கள்: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம்

செய்திப்பிரிவு

இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலனின் முதலாம் ஆண்டுநினைவு நாளையொட்டி, திருச்சி மாவட்டம் சீராத்தோப்பில் உள்ளஅவரது நினைவிடத்தில் பாஜகமாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று மரியாதை செலுத்தினார்.

அப்போது அவர் பேசியது: 1980-ல் மீனாட்சிபுரத்தில் 300 குடும்பங்கள் இந்து மதத்தில் இருந்து வெளியேறி, மாற்று மதத்தைத் தழுவும்போது அதற்கான காரணங்களை ஆய்வு செய்து, அவற்றை அடியோடு மாற்ற முயற்சி செய்தவர். தீண்டாமையை வேரோடு அகற்றப் பாடுபட்டவர்.

கோயிலுக்குள் அனைத்து மனிதர்களும் செல்ல வேண்டும் என்ற நிலையை உருவாக்கிக் கொடுத்தவர். இந்து என்ற வாழ்வியல் முறையை ஆங்கிலேயர்கள் மதம் என்ற கோட்பாட்டுக்குள் அடைக்கப் பார்த்தனர். மதம் என்ற கோட்பாட்டுக்குள் அடைக்கப்பட்ட இந்து வாழ்வியல் முறையை மீட்டவர் ராமகோபாலன்.

கோயில்களை வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் திறக்காதது குறித்து பொதுமக்கள் அரசிடம் கேள்வி எழுப்புகின்றனர். கோயிலைத் திறக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இதையெல்லாம் காணும்போது ராமகோபாலனின் கனவு நனவாகி வருகிறது.

ஜிஎஸ்டி குறித்து என்னவென்று தெரியாமலேயே தமிழக எம்பிக்கள் பேசி வருகின்றனர். அதை எதிர்த்து வருகின்றனர் என்றார்.

SCROLL FOR NEXT