சென்னை நுங்கம்பாக்கத்தில் ரூ.65 கோடியில் கட்டப்பட்ட, வருமான வரித் துறை அலுவலர்களுக்கான ‘சிகரம்’ அடுக்குமாடு குடியிருப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று திறந்து வைத்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் வருமானவரித் துறை அலுவலகம் (ஆயக்கர் பவன்) இயங்கி வருகிறது. அந்த வளாகத்தில் வருமானவரித் துறை சார்பில் 234 சதுர மீட்டர் பரப்பளவில் 19 தளங்கள் கொண்ட, வருமானவரி அலுவலர்களுக்கான ‘சிகரம்’ அடுக்குமாடி குடியிருப்பு ரூ.65 கோடியில் கட்ட திட்டமிடப்பட்டு, கடந்த 2016-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில், அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று அடுக்குமாடி குடியிருப்பை திறந்துவைத்தார். பின்னர் அந்த குடியிருப்புகளை பார்வையிட்டார்.
இந்த குடியிருப்பு வளாகத்தின் மொட்டை மாடியில் சூரிய ஒளி மின்சார தகடுகள் நிறுவப்பட்டுள்ளன. 25 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், திடக்கழிவு மேலாண்மைக் கட்டமைப்புகள் ஆகியவையும் வளாகத்தில் இடம்பெற்றுள்ளன.
இந்நிகழ்ச்சியில் மத்திய வருவாய்த் துறை செயலர் தருண் பஜாஜ், மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் ஜெ.பி.மொஹாபாத்ரா, மத்திய மறைமுக வரிகள் வாரிய தலைவர் எம்.அஜித்குமார், முதன்மை தலைமை வருமான வரி ஆணையர் டி.சி.பட்வாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.