கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்க ஆணை பிறப்பித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (செப். 30) தன் ட்விட்டர் பக்கத்தில், "தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு 5 மாத ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. விரிவுரையாளர்களின் நிதி நெருக்கடியைப் போக்கும் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது!
5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் கவுரவ விரிவுரையாளர்கள் அனுபவிக்கும் துயரம் குறித்தும், முருகானந்தம் என்ற விரிவுரையாளர் இறந்தது குறித்தும் நேற்று நான் வலியுறுத்தியிருந்தேன். அடுத்த 6 மணி நேரத்தில் ஊதியம் வழங்க அரசு ஆணையிட்டது மகிழ்ச்சியளிக்கிறது.
ஊதிய நிலுவை வழங்கப்பட்டாலும் கூட, கவுரவ விரிவுரையாளர் முருகானந்தம் மறைவால் அவரது குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பு ஈடு செய்யப்படவில்லை. வறுமையில் வாடும் அவரது குடும்பத்துக்கு நியாயமான இழப்பீடு வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணையிட வேண்டும்!" என பதிவிட்டுள்ளார்.