தமிழகம்

கியூ ஆர் கோடு ஸ்கேன் மூலம் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதம்: தமிழகத்தில் முதன்முறையாக மதுரையில் அறிமுகம்

என்.சன்னாசி

தமிழகத்தில் முதன்முறையாக ‘ கியூ ஆர் கோடு ’ ஸ்கேன் மூலம் போக்குவரத்து விதி மீறலுக்கான அபராதம் வசூலிக்கும் திட்டம் மதுரையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக தமிழகத்தில் போக்குவரத்து விதி மீறல்களைக் கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்து போலீஸார் விதிமீறல்களில் ஈடுபடுபவர்களிடம் ரசீது வழங்கி அபராதம் வசூலித்தினர். இதில் சில தவறு நடக்க வாய்ப்பு நேரும் நிலையில், இது மாற்றப்பட்டு, ஆன்லைன் (டிஜிட்டல்) மூலம் அபராதத் தொகை வசூலிக்கப்படுகிறது.

கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மூலம் மற்றும் இ-சேவை மையங்கள், தபால் நிலையங்கள் மூலமாக அபராதத் தொகையை செலுத்த வழிவகை செய்யப்பட்டது.

இந்நிலையில் முதல் முறையாக ‘ கியூ ஆர் கோடு’ (QR Code) ஸ்கேன் முறையில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை கார்டுகள் மூலம் செலுத்தும் நடைமுறையைக் கடந்த வாரம் மதுரை மாநகர போக்குவரத்துப் பிரிவு தொடங்கியுள்ளது.

இதன்மூலம் தமிழகத்தில் எந்த ஒரு பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை கியூ ஆர் கோட் (G- Pay, Phonepe, Paytm) மூலம் பணம் செலுத்தலாம் என, அப்பிரிவு போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து போக்குவரத்து உதவி ஆணையர் மாரியப்பன் கூறுகையில், ‘‘ இந்த புதிய திட்டத்தால் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு இ-சேவை மையம் அல்லது காவல் நிலையங்களுக்கு சென்று அபராதம் செலுத்தும் கால விரயத்தை குறைக்கிறது.

ஏற்கெனவே அபராதத் தொகையை செலுத்தாமல் நிலுவையில் இருந்தாலும், அதை செலுத்த முடியும். கரோனா போன்ற பேரிடர் காலத்தில் கார்டு பண பரிவர்த்தனையால் நோய் பரவலைத் தடுக்கலாம்,’’ என்றார். இது தொடர்பாக பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் கவனத்திற்கென விழிப்புணர்வு பதாகைகளும் மாநகர் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன.

தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி உள்ளிட்ட போக்குவரத்து போலீஸார் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.

SCROLL FOR NEXT