பண்ருட்டி அருகே பணிக்கன் குப்பத்தில் இயங்கி வரும் முந்திரி ஆலையில் பணிபுரிந்து வந்த கோவிந்தராஜ் (55) என்பவர் கடந்த 20-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த பணிக்கன் குப்பத்தில் கடலூர் மக்களவை உறுப்பினரான டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் பங்குதாரராக உள்ள முந்திரி ஆலையில், அதே பகுதியில் இருந்து பணிபுரிந்து வந்த கோவிந்த ராஜூ என்பவர் மர்மான முறையில் உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உறவினர்கள் கோவிந்த ராஜூவின் உடலில் காயம் இருப்பதை அறிந்து, அவரை நிறுவனத்தில் உள்ள பணியாளர்கள் சிலர் தாக்கியதால்தான் உயிரிழந்தார் எனக் கூறி, அவர்களை உடனடியாகக் கைது செய்யவேண்டும் என வலியுறுத்தி காடாம்புலியூர் காவல் நிலையம் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் போலீஸார் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தைத் தொடர்ந்து, அவர்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். புகாரைத் தொடர்ந்து சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்த போலீஸார், எதிரிகளாக நிறுவன உரிமையாளர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவுசெய்தனர்.
இதனிடையே இந்த வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி, தமிழக டிஜிபி சைந்திரபாபு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.