வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டம் இன்று (செப்.27) நடைபெற உள்ளது.
ஐக்கிய விவசாயிகள் முன்னணிஅழைப்பு விடுத்துள்ள இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு தமிழகத்தில் திமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இ்ந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்.) உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இன்று காலை சென்னை அண்ணா சாலை, தாராப்பூர் டவர் அருகில் நடைபெறும் சாலை மறியல் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஆர். முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்) மாநிலச்செயலாளர் என்.கே. நடராசன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
கிண்டியில் நடைபெறும் சாலைமறியல் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், சிஐடியு மாநிலபொதுச்செயலாளர் ஜி. சுகுமாறன்,இந்திய கம்யூனிஸ்ட் தென்சென்னை மாவட்டச் செயலாளர்எஸ். ஏழுமலை, தமிழக விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஆளும் திமுக ஆதரவுதெரிவித்துள்ளது. திமுகவின் தொமுச பேரவை பொருளாளர் நடராஜன் கூறும்போது, "போராட்டத்துக்கு தொமுச, சிஐடியு, ஏஐடியுசி தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. பேருந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் போராட்டம் நடைபெறும்" என்றார்.
பேருந்து போக்குவரத்து பாதிக்கப்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற தடுப்பூசி முகாமில் பங்கேற்ற சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கும் வகையில் திங்கள்கிழமை (இன்று) அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. எனவே, வழக்கமாக இயங்கும் தடுப்பூசி மையங்கள் இன்று செயல்படாது என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.