இந்திய கடல் எல்லையைத் தாண்டியதாக தடுத்து நிறுத்தி காரைக்கால் தனியார் துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்ட மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்ட நாகை கடலோரப் பாதுகாப்புக் குழும கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணன். 
தமிழகம்

கடல் எல்லையைத் தாண்டியதால் மீனவர்களை தடுத்து நிறுத்திய கடலோர பாதுகாப்பு படையினர்

செய்திப்பிரிவு

இந்திய கடல் எல்லையைத் தாண்டிச் சென்று மீன்பிடித்த 38 மீனவர்களை இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் நேற்று தடுத்து நிறுத்தி, கரைக்கு அழைத்து வந்து, மீன்வளத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லையைத் தாண்டிச் சென்று மீன்பிடிப்பதைத் தடுப்பதற்காக, இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் செப்.25-ம் தேதி முதல் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை, சாமந்தான்பேட்டை, நாகூர் பட்டினச்சேரி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 38 மீனவர்கள் 4 விசைப்படகுகளில் நேற்று இந்திய கடல் எல்லையைத் தாண்டிச் சென்று மீன்பிடித்ததை இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர்.

இதையடுத்து, அவர்களைத் தடுத்து நிறுத்திய கடலோர பாதுகாப்பு படையினர், 4 விசைப்படகுகளுடன் 38 மீனவர்களையும் காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர், அவர்கள் அளித்த தகவலின்பேரில், நாகை கடலோர பாதுகாப்புக் குழும கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணன், ஆய்வாளர் ராஜா மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் காரைக்கால் தனியார் துறைமுகத்துக்குச் சென்றனர்.

மீனவர்களிடம் விசாரணை

அங்கு, மீனவர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட பிறகு, மேல் நடவடிக்கை எடுப்பதற்காக மீனவர்களையும், விசைப் படகுகளையும் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் இந்திய கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் ஒப்படைத்தனர். மீனவர்களிடம் மீன்வளத் துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT