கோவை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் வால்பாறை வனச்சரகருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.
சுற்றுலா பயணிகளை மதுபோதையில் தகாத வார்த்தையில் திட்டி, விடுதியில் இருந்து வெளியேற்றியதாக வால்பாறை நீதிமன்ற தலைமை எழுத்தர் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட வால்பாறை வனச்சரகருக்கு ஆதரவாக வன அலுவலர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கிடையில் வால்பாறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கடந்த 23 ம் தேதி ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. மாஜிஸ்திரேட் இவ்வழக்கின் விசாரணையை வரும் 28 ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார். இதனால் முன்கூட்டியே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள (அட்வான்ஸ் ஹியரிங்) வனச்சரகர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை மாஜிஸ்திரேட் தள்ளுபடி செய்துள்ளார்.
இதனால் கோவை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது. மாவட்ட நீதிபதி சக்திவேல் முன்னிலையில் சிறப்பு விசாரணைக்கு (அவசர வழக்கில் சிறப்பு அமர்வு) எடுத்து கொள்ளப்பட்டது. வழக்கினை விசாரித்த நீதிபதி, வனச்சரகருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.