தமிழகம்

வங்கக்‌ கடலில்‌ புயல் வாய்ப்பு; 9 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

வங்கக்‌ கடலில்‌ புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாகவும், 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன்‌ கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்‌ முனைவர்‌ நா.புவியரசன்‌ இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''நேற்று கிழக்கு மத்திய வங்கக்‌ கடலில்‌ நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வடமேற்கு மற்றும்‌ மத்திய மேற்கு வங்கக்‌ கடலில்‌ நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 6 மணி நேரத்தில்‌ வலுப்பெற்று, புயல்‌ சின்னமாக மாறக்கூடும்‌. இந்தப் புயல்‌ சின்னம்‌ மேற்கு திசையில்‌ நகர்ந்து நாளை மாலை வடக்கு ஆந்திரா- தெற்கு ஒடிசா கடற்கரையை விசாகப்பட்டினம்‌- கோபால்பூருக்கு இடையே கடக்கக்கூடும்‌ என எதிர்பார்க்கப்படுகிறது.

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும்‌ வெப்பச் சலனம்‌ காரணமாக

25.09.2021:

மதுரை, விருதுநகர்‌, சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர்‌, திருச்சிராப்பள்ளி, சேலம்‌, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கனமழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும் பெய்யக்கூடும்‌.

26.09.2021:

தென் மாவட்டங்கள்‌, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னை நிலவரம்

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்‌.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்கக்‌ கடல்‌ பகுதிகள்‌:

26.09.2021, 27.09.2021: பலத்த காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ குமரிக்கடல்‌, மன்னார்‌ வளைகுடா, தென்மேற்கு வங்கக் கடல்‌ பகுதிகளில்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்‌ என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

அரபிக் கடல்‌ பகுதிகள்‌:

26.09.2021, 27.09.2021: பலத்த காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ கேரளா, லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும்‌ தென்‌ கிழக்கு அரபிக் கடல்‌ பகுதிகளில்‌ வீசக்கூடும்‌.

மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்‌ என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்''‌.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT