கரோனாவால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு மத்திய அரசு நேரடியாக நிவாரண நிதி வழங்க வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, முத்தரசன் இன்று (செப். 25) வெளியிட்ட அறிக்கை:
"கரோனா நோய்த் தொற்றால் இறந்துபோனவர் குடும்பங்களுக்கு போதிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் நேற்று முன்தினம் (23.09.2021) மத்திய அரசு பிராமணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
இதில், கரோனாவால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் நிவாரண நிதியாக மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இத்துடன் கரோனா உயிரிழப்புக்கான வரையறைகளையும் தெரிவித்துள்ளது.
முன்னர் மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஜிஎஸ்டி வரி மூலம் மாநிலங்களின் நிதி வருவாயைப் பெருமளவு மத்திய அரசு வசப்படுத்தி, மடைமாற்றம் செய்து கொண்டுள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பால் தமிழகத்துக்கு ஏற்பட்ட நிதி இழப்பை, மத்திய அரசு ஈடு செய்யும் எனக் கொடுத்த உறுதிமொழி மதிக்கப்படவில்லை.
கடந்த 2020 மார்ச் மாதம் தொடங்கிய கரோனா நோய்த்தொற்றுப் பரவல், முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை எனத் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த நோய்த்தொற்றுத் தடுப்புப் பணிகளை மாநில அரசுகள் தனது சொந்த நிதியாதாரத்தில் இருந்து மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதன் வகையில், தமிழக அரசு பெரும் கடன் சுமைக்கு ஆளாகியுள்ளது. முந்தைய அரசு குடும்பத்துக்கு தலா ரூ.1,000 ரொக்கப் பண உதவி செய்திருந்த நிலையில், திமுகவின் புதிய அரசு அமைந்தவுடன் குடும்பங்களுக்கு தலா ரூ.4,000 வீதம், இரு தவணைகளில் ரொக்கப் பண உதவியும், 14 அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர, உயிர் காக்கும் மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர். மருந்துவப் பரிசோதனைக் கருவிகள், தடுப்பு மருந்துகள், முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, உயிரிழந்த முன்களப் பணியாளர்கள் உயிரிழப்புக்கு இழப்பீடு என எல்லா வகைச் செலவினங்களையும் மாநில அரசே ஏற்கும்படி நிர்பந்திக்கப்பட்டுள்ளது.
ஆரோக்கிய வாழ்வில் எதிர்பாராது ஏற்பட்டிருக்கும் இயற்கை பேரிடருக்கு மத்திய அரசு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மாநிலங்களுக்குப் போதுமான நிதி உதவி செய்யவில்லை. மாறாக அறிவுரைகளும், ஆலோசனைகளும் மட்டுமே தெரிவித்து வருகின்றது.
இந்த நிலையில், கரோனா நோய் பாதிப்பில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கும் பொறுப்புக்கு மாநிலங்களைக் கைகாட்டிவிட்டு, மத்திய அரசு தனது கடமைப் பொறுப்புகளைத் தட்டிக் கழிப்பது எவ்வகையிலும் ஏற்கத்தக்கதல்ல.
எனவே, மத்திய அரசு தனது நிலையை மறுபரிசீலனை செய்து, கரோனாவால் உயிரிழந்தோர் குடும்பங்கள் அனைத்துக்கும் நிபந்தனையின்றி நேரடியாக நிிவாரண நிதி வழங்க வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது".
இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.