தமிழகம்

பதவிக்கு வருவது எப்போது?- துரை வைகோ விளக்கம்

செய்திப்பிரிவு

வடசென்னை கிழக்கு மாவட்ட மதிமுக சார்பில் பெரியார் பிறந்தநாள், அண்ணா பிறந்த நாள், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிறந்த நாள் ஆகிய முப்பெரும் விழா, சென்னையில் நேற்றுமுன்தினம் நடந்தது. மாவட்டச் செயலாளர் சு.ஜீவன் தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந் தினராக பங்கேற்றார்.

வைகோவின் 77-வது பிறந்த நாளையொட்டி கேக் வெட்டி கொண்டாடினர். ‘சகாப்தம்’ என்ற யூ-டியூப் சேனலை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

நிறைவாக, துரை வைகோ பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டும் வைகோ பிறந்த நாள் (செப்.22) தமிழர் தலை நிமிர்வு நாளாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும். முதல்வர் மு.க.ஸ்டாலின், உங்கள் அண்ணன் வைகோவை தாய் உள்ளத்தோடு அரவணைக்க வேண்டும் என்று கோருகிறேன்.

இப்போது தொண்டர்கள் கூறுவதுபோல, மக்களும் கேட்க வேண்டும். வைகோ மகன் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்று மக்கள் கேட்கும்போது பதவிக்கு வருவேன். திராவிட இயக்கத்துக்கு மதமோ, கடவுளோ எதிரி இல்லை. மூட நம்பிக்கைக்குத்தான் எதிரி. துரை வைகோவுக்கு பெரியாரும் வேண்டும். பெருமாளும் வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தலைவர்கள் வாழ்த்து

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நேற்று தனது 77-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அதையொட்டி முதல்வர் ஸ்டாலின்,திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்தினர்.

SCROLL FOR NEXT