தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் அதிகாரங்களைப் போராடித்தான் பெறவேண்டி இருப்பதாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக கிராம சபைக் கூட்டம் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. புதிய அரசு அமைந்த பிறகு, இந்த கிராம சபைக் கூட்டத்துக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய அரசும் கிராம சபைக் கூட்டம் நடத்தத் தடை விதித்தது.
இந்த நிலையில் திமுக ஆட்சியில் முதல் முறையாக வருகிற அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி நாளில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக, கமல்ஹாசன் இன்று (செப். 21) தன் ட்விட்டர் பக்கத்தில், "கிராம சபைகளை நடத்தும் அதிகாரத்தில் மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் தலையிட முடியாது என, பஞ்சாயத்துத் தலைவர் ஒருவர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் அதிகாரங்களைப் போராடித்தான் பெறவேண்டி இருப்பதன் அடையாளம் இது" எனப் பதிவிட்டுள்ளார்.