வண்டலூரில் வரும் 27-ம் தேதி நடைபெறும் பாமகவின் மாநில மாநாட்டில் தொண்டர்கள் குடும்பத்துடன் கலந்துகொள்ள வேண்டும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக மக்களின் இன்றைய மிகப்பெரிய கோரிக்கை என்னவெனில் ஆட்சி மாற்றம் தான். அதுவும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறி மாறி ஏற்படும் ஆட்சி மாற்றமல்ல. 50 ஆண்டுகளாக நீடித்து தமிழகத்தை சீரழிக்கும் அதிமுக, திமுக ஆகிய திராவிடக் கட்சிகளிடமிருந்து விடுதலை பெற்றுத் தரும் ஆட்சி மாற்றம் தான்.
அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத் தான் கடந்த ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி சேலத்தில் நடந்த பாமக மாநாட்டில் கட்சியின் முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்டார்.
தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கவிருப்பதன் முதற்கட்டமாகத் தான் தலைநகரின் நுழைவாயிலான வண்டலூரில் 2016 ஆட்சி மாற்றத்திற்கான பாமகவின் மாபெரும் மாநில மாநாட்டை வரும் 27-ம் தேதி மிகச்சிறப்பாக நடத்தவிருக்கிறோம்.
இதுவரை நடந்த 8 மண்டல மாநாடுகளும் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளன. அவற்றை விஞ்சும் வகையில், இந்த மாநில மாநாடு அமைய வேண்டும் என்பது தான் எனது விருப்பம்.
பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் இம்மாநாட்டில் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.