தமிழகம்

உள்ளாட்சி பதவிகளை ஏலம் விட்டால் நடவடிக்கை: மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி எச்சரிக்கை

செய்திப்பிரிவு

உள்ளாட்சி பதவிகளை ஏலம் விட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே குழிபிறையில் நேற்று மேம்படுத்தப்பட்ட கிளை நூலகத்தை திறந்து வைத்த அமைச்சர் எஸ்.ரகுபதி பின்னர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக நீண்டகாலம் சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலை குறித்து குடியரசுத் தலைவருக்கு தமிழக முதல்வர் மூலம் கடிதம் வாயிலாக அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. 7 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்குக் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகிறோம். ஏற்காதபட்சத்தில் சட்டப் போராட்டம் நடத்துவோம்.

உள்ளாட்சித் தேர்தலில் ஜனநாயக முறையில் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தற்போது ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள மாவட்டங்களில் உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவதாக அரசின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

SCROLL FOR NEXT