பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

புதுச்சேரியில் 79 பேருக்கு கரோனா தொற்று; 2 பேர் உயிரிழப்பு: தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை 9 லட்சத்தைக் கடந்தது

அ.முன்னடியான்

புதுச்சேரியில் புதிதாக 79 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 9 லட்சத்தைக் கடந்துள்ளது.

இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலாளர் அருண் இன்று (செப்.19) வெளியிட்ட தகவல்:

"புதுச்சேரி மாநிலத்தில் 4,765 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரி-50, காரைக்கால்- 17, ஏனாம்-2, மாஹே-10 பேர் என, மொத்தம் 79 பேருக்கு (1.66 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 25 ஆயிரத்து 463 ஆக அதிகரித்துள்ளது. இதில், தற்போது மருத்துவமனைகளில் 161 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 762 பேரும் என, 923 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

காரைக்கால் டி.ஆர்.பட்டினம் பகுதியைச் சேர்ந்த 67 வயது முதியவர், மாஹே பந்தக்கல் பகுதியைச் சேர்ந்த 59 வயதுப் பெண் என, இருவர் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,831 ஆகவும், இறப்பு விகிதம் 1.46 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

புதிதாக 78 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 709 (97.80 சதவீதம்) ஆக உள்ளது. மாநிலத்தில் இதுவரை 9 லட்சத்து 8 ஆயிரத்து 166 பேருக்கு (2-வது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது".

இவ்வாறு அருண் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT